சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அருகேயுள்ள இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாரதி மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும், நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாப்பாத்தி காடு பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஜலகண்டபுரத்தில் இருந்து எதிரே வந்த பால் ஏற்றி வந்த மினி வேன் மீது பைக் பயங்கரமாக மோதியது.
இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில், பைக்கில் இருந்த மாணவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மினி வேனில் பயணம் செய்த மேச்சேரியைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற இளைஞரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நங்கவள்ளி காவல்துறையினர், உயிரிழந்த 3 இளைஞர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வேனில் வந்து பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் என்பவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே விபத்தில் 3 இளம் உயிர்கள் பறிபோனது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்குக் காரணமா அல்லது இரவு நேரக் கவனக்குறைவா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : சித்தர்கள் வணங்கும் சிவன் கோயில்..!! 800 ஆண்டுகால வரலாறு..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?



