பெரிய அளவிலான சேமிப்பை உருவாக்க வேண்டும் என்றால் பங்குச்சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளில் இறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக, நடுத்தர வர்க்கத்தினரின் நம்பிக்கைக்குரிய இடமாக திகழும் அஞ்சலகத்தின் ‘ரெக்கரிங் டெபாசிட்’ (Post Office RD) திட்டத்தை பயன்படுத்தி, சிறிய சேமிப்பின் மூலமே சுமார் ரூ.20 லட்சம் வரையிலான நிதியை உருவாக்க முடியும். மத்திய அரசின் நேரடி பாதுகாப்புடன் செயல்படும் இத்திட்டம், சந்தை ஏற்ற இறக்கங்களை தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
அஞ்சலக ஆர்டி திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் எளிமையும் பாதுகாப்பும் தான். வெறும் 100 ரூபாய் முதலீட்டில் கூட ஒரு தனிநபர் தனது சேமிப்பு பயணத்தை தொடங்கலாம். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படுவதால் ‘கூட்டு வட்டி’ (Compound Interest) பலன் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படை முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், முதிர்வுக்குப் பின் மீண்டும் அத்தொகையை மறுமுதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு சேமிப்பைத் தொடரலாம்.
ஒரு முதலீட்டாளர் தினமும் 400 ரூபாய் வீதம், மாதத்திற்கு 12,000 ரூபாயை சேமிக்க தொடங்கினால், அது ஒரு ஆண்டில் 1.44 லட்சமாக உயரும். இதே சீரான வேகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும்போது, வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகை சுமார் 20 லட்சத்தைத் தொடும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த 20 லட்சத்தில் பெரும் பகுதி வட்டி வருமானமாகவே இருக்கும் என்பதுதான். சிறிய துளி பெருவெள்ளம் என்பதைப் போல, தினசரி நாம் ஒதுக்கும் சிறு தொகையானது காலப்போக்கில் ஒரு பெரும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இத்திட்டம் குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்குப் பெரும் துணையாக இருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பெயரிலும் இதைப் பெற்றோர்கள் தொடங்கலாம். மேலும், அவசரத் தேவைக்காக ஒரு வருடத்திற்குப் பிறகு கடன் பெறும் வசதியும், வாரிசுதாரரை நியமிக்கும் வசதியும் இதில் உண்டு. பங்குச்சந்தையின் பதற்றம் இன்றி, போட்ட முதலீட்டிற்கு முழு உத்தரவாதம் அளிக்கும் அஞ்சலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டம், ஒருவரது எதிர்கால நிதித் தேவைகளுக்கான மிகச்சிறந்த அடித்தளமாகும்.
Read More : கொளத்தூரில் ரகசிய ஸ்கெட்ச்..!! முதல்வரின் கோட்டையை தகர்க்க முக்கியப் புள்ளியை களத்தில் இறக்கும் விஜய்..!!



