கடலூர் மாவட்டம் பாசாரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆவேசமாக உரையாற்றினார்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் தேமுதிகவின் பலம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தனது பேச்சின் மூலம் அவர் கோடிட்டுக் காட்டினார். “எந்தக் கூட்டணிக்கு தேமுதிக செல்கிறதோ, அதுவே உண்மையான மெகா கூட்டணி; நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளே உங்களை அரியணையில் அமர்த்தும்” என கூறினார்.
இந்த மாநாட்டில் விஜயபிரபாகரனின் பேச்சு, குறிப்பாக நடிகர் விஜய்யை நோக்கியே அதிகம் அமைந்திருந்தது. தவெக தலைவர் விஜய்க்கு ஒரு சகோதரராகவும், கேப்டன் விஜயகாந்தின் மகனாகவும் ஒரு முக்கிய அரசியல் ஆலோசனையை அவர் வழங்கினார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் கட்சி தற்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசுவது, “மீனைப் பிடிக்கப் போடும் தூண்டில்” போன்றது என்றும், அதில் விஜய் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். தனது தேர்தல் அனுபவத்தை முன்வைத்துப் பேசிய விஜயபிரபாகரன், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தான் போட்டியிட்டபோது காங்கிரஸ் கட்சியினர் தனக்கு எதிராக செய்த வியூகங்களை நினைவுகூர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியினர் விஜய்யுடன் கூட்டணி வைப்பது போல தோற்றம் காட்டிவிட்டு, இறுதியில் திமுகவுடன் பேரம் பேசி அங்கேயே தங்கிவிடுவார்கள் என்று குற்றம் சாட்டினார். எனவே, காங்கிரஸ் போன்ற கட்சிகளை நம்பாமல், சினிமா துறையினர் மற்றும் உண்மையான சக்திகளுடன் கைகோர்க்குமாறு விஜய்க்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Read More : கொளத்தூரில் ரகசிய ஸ்கெட்ச்..!! முதல்வரின் கோட்டையை தகர்க்க முக்கியப் புள்ளியை களத்தில் இறக்கும் விஜய்..!!



