2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் முறைப்படி கால்பதித்த பிறகு, திராவிட கட்சிகளுக்குப் புதிய சவால்கள் உருவாகியுள்ளன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, அக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்துள்ள நிலையில், தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தவெக-வை நோக்கி அணிவகுப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து செங்கோட்டையன் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சாபனப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக்கட்சிகளின் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொழிலதிபர் எஸ்.ஆர்.சம்பங்கி முன்னிலையில் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை கிராமப்புறங்களிலும் வேகம் எடுத்துள்ளதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
இதேபோல், சேலம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அடுத்தடுத்து இணைப்புகள் நடைபெற்று வருகின்றன. சேலம் சங்ககிரி வங்காளியூர் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், காசிராஜன் மற்றும் ஜலகண்டாபுரம் திமுக 15-வது வார்டு அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகினர். இவர்கள் அனைவரும் சேலம் தவெக மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் முறைப்படி தவெக-வில் இணைந்தனர்.
தேர்தல் நெருங்க நெருங்க, இத்தகைய கட்சித் தாவல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும், இது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Read More : மாணவர்களே..!! நாளையே கடைசி..!! தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.10,000-ஐ மிஸ் பண்ணிடாதீங்க..!!



