தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தீவிர விசாரணையை தொடர்ந்து, கட்சியின் தலைமை என்ற அடிப்படையில் விளக்கம் அளிக்க விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதிகாரிகளின் உத்தரவின்படி, இன்று (ஜனவரி 12) காலை 11 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் ஆஜராகிறார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தவெக தலைவரிடம் நடத்தப்படும் இந்த விசாரணை, வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணம், பாதுகாப்பு விதிமீறல்கள் ஏதேனும் நடந்ததா மற்றும் நிர்வாக தரப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Read More : பேச்சுவார்த்தை நிறைவு..!! விஜய் அழைப்பு..!! TVK-வில் இணைகிறார் ஓபிஎஸ்..!! தவெக நிர்வாகி பரபரப்பு பேட்டி..!!



