ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த பிறகு பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், மறுபுறம், அஞ்சல் அலுவலக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளுக்கு முன்பை போலவே அதிக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்.
ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டின் 4வது மற்றும் கடைசி காலாண்டிற்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் நிதி அமைச்சகம் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்தத் திட்டம் பற்றி தெரிந்துகொள்வோம். இதில், நீங்கள் வெறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.44,995 என்ற நிலையான, அதிக வட்டியை பெறலாம்.
நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என வெவ்வேறு காலங்களுக்கு கால வைப்புக் கணக்கைத் (TD) தொடங்கலாம். அஞ்சல் அலுவலக கால வைப்புக் கணக்கு (Time Deposit) ஒரு வங்கி FD திட்டத்தைப் போன்றது. இதில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்து, முதிர்வு காலத்திற்குப் பிறகு வட்டியுடன் முழுத் தொகையையும் பெறுவீர்கள்.
வங்கி FD-களைப் போலவே, கால வைப்புத் திட்டங்களிலும் வாடிக்கையாளர்கள் முதிர்வு காலத்திற்குப் பிறகு ஒரு நிலையான வட்டித் தொகையைப் பெறுகிறார்கள். இதில் எந்த நிபந்தனைகளும் இல்லை. அஞ்சல் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு கால வைப்புக்கு 6.9 சதவீதம், 2 ஆண்டு கால வைப்புக்கு 7.0 சதவீதம், 3 ஆண்டு கால வைப்புக்கு 7.1 சதவீதம் மற்றும் 5 ஆண்டு கால வைப்புக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் 5 ஆண்டு கால வைப்புத் திட்டத்தில் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ.1,44,995 பெறுவீர்கள். இதில் ரூ.44,995 என்பது நிலையான வட்டித் தொகையாகும். தற்போது நாட்டில் எந்த வங்கியும் 5 ஆண்டு FD திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல் அலுவலக கால வைப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் ஒரே வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு சாதாரண குடிமக்களை விட 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்கப்படுகிறது. பல வங்கிகள் 80 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
Read More : ஓட்டுநர் உரிம விதிகள் மாற போகுது.. இனி விதிமீறல்களுக்கு அபராதப் புள்ளிகள்.. முழு விவரம் இதோ..!



