தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அதிமுக-வுக்கு வலுசேர்க்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறு சரிவுகளை, டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் வாக்குகளை கொண்டு ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்தது. ஆனால், தற்போது அந்த மண்டலத்திலேயே மூத்த நிர்வாகிகளுக்கு இடையே வெடித்துள்ள அதிகாரப் போட்டி, அந்தத் தேர்தல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்கள் பிரிந்து சென்றது ஒரு பலவீனமாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கிடையேயான ஈகோ யுத்தம் களப்பணியை பாதித்துள்ளது. குறிப்பாக, டெல்டா அரசியலின் முக்கிய முகமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், தனது ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு இணையாக ஓ.எஸ். மணியன் போன்ற மற்ற மூத்த தலைவர்களுடனான ஒருங்கிணைப்பு குறைபாடு, தேர்தல் வியூகங்களை செயல்படுத்துவதில் தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், திமுக தரப்பில் அமைச்சர் கே.என். நேருவின் அதிரடி நகர்வுகள் அதிமுக-வுக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கி வருகின்றன. கோட்டைக்குள் ஓட்டை விழாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுக தலைமைக்கு, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான உட்கட்சிப் பூசல்கள் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. கீழ்மட்டத் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றத் தயாராக இருந்தாலும், மாவட்டத் தலைவர்களிடையே நிலவும் ஒருமித்த கருத்தின்மை தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கக் கூடும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
காலங்காலமாக நிலவி வரும் இந்த பஞ்சாயத்துகளை எடப்பாடி பழனிசாமி இப்போதே தீர்க்கத் தவறினால், அது டெல்டா மாவட்டங்களில் அதிமுக-வின் வெற்றி வாய்ப்பை வெகுவாக சிதைத்துவிடும். “வீட்டுச் சண்டையை வீதிக்கு வராமல் தடுத்தால் மட்டுமே வெற்றி” என்ற யதார்த்தத்தை அதிமுக தலைமை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரும் நாட்களில் எடப்பாடியின் சமரச முயற்சிகள் எந்தளவுக்கு கைகொடுக்கின்றன என்பதை பொறுத்தே டெல்டாவின் தேர்தல் முடிவுகள் அமையும்.



