தெலங்கானா மாநிலம் கரீம்நகரில், இன்ஸ்டாகிராம் மோகத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வீழ்த்தி, ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்து வந்த கில்லாடி தம்பதியினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரானைட் தொழிலில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுகட்டவும், குறுகிய காலத்தில் சொகுசு வாழ்க்கை வாழவும் இந்தத் தம்பதியினர் அரங்கேற்றிய இந்த ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) மோசடி, தற்போது போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியைச் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்கள் பதிவிடச் செய்து, அதன் மூலம் ஈர்க்கப்படும் இளைஞர்களுடன் கணவனே நட்பாக பேசி அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்குத் தனது மனைவியுடன் அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களை ரகசியமாகப் படம்பிடித்து வைத்துக் கொள்வதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
பின்னர், அந்த வீடியோக்களை காட்டி சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டி, சமூகத்தில் அவர்களின் நற்பெயருக்கு கறை கற்பிப்பதாக அச்சுறுத்தி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி கும்பல் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி, கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் துணிச்சலுடன் கரீம்நகர் போலீசில் புகார் அளித்த பிறகே, இந்தத் தம்பதியினரின் கள்ளத்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. புகாரளித்த நபரிடமிருந்து ஏற்கனவே 14 லட்சம் ரூபாயைப் பறித்த அந்தத் தம்பதியினர், மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் போலீஸை நாடியுள்ளார். இதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், அந்தத் தம்பதியினரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார், காசோலைகள் மற்றும் பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



