பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு பழைய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அடித்தளம், இடைத்தளம் மற்றும் மேலும் மூன்று தளங்களில் கடைகளைக் கொண்டிருந்த இந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ, ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
6 உடல்கள் உடனடியாக மீட்பு
மீட்புப் பணி 1122-இன் தலைமைச் செயல் அதிகாரி அபித் ஜலால் ” தீ விபத்து ஏற்பட்ட உடனேயே 6 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருந்தனர். காயமடைந்த டஜன் கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், தீ பரவியதால், மீட்புக் குழுவினரால் உள்ளே செல்ல முடியவில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு, நாங்கள் கட்டிடம் குளிர்ச்சியடையும் வரை காத்திருக்காமல், உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க வலுக்கட்டாயமாக உள்ளே சென்றோம். அப்போது மேலும் எட்டு உடல்களைக் கண்டெடுத்தோம், அவற்றில் சில கடுமையாகக் கருகியிருந்தன,” என்று தெரிவித்தார்.
பலவீனமான தூண்களால் கட்டிடத்தின் ஒரு பின்புறம் மற்றும் ஒரு முன்புறப் பகுதி இடிந்து விழுந்ததால், தீ விபத்தில் கட்டிடம் கிட்டத்தட்ட முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். “தீ விபத்தால் கட்டிடத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. மேலும் பல கட்டிட இடிபாடுகளைக் காண முடிவதால், எஞ்சியிருக்கும் நபர்களைத் தேடும் பணியை நாங்கள் இன்னும் தொடர்கிறோம்,” என்று ஜலால் கூறினார்.
அனைத்து தளங்களிலும் சுமார் 1200 கடைகளை கொண்ட இந்த சந்தை, 1980-களின் முற்பகுதியில் இருந்து சத்தார் வணிகப் பகுதியில் உள்ள முக்கிய எம். ஏ. ஜின்னா சாலையில் கராச்சியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் டெசோரி, 70 பேர் இன்னும் கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். நாங்கள் மிகுந்த கவலையுடனும் அச்சத்துடனும் இருக்கிறோம். அவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.. ஆனால் இது ஒரு தேசிய துயரம்,” என்று கூறினார்.
தெற்குப் பகுதி டிஐஜி சையத் அசாத் ரசா, தப்பிப்பிழைத்தவர்களை கண்டறிய இன்னும் பல பகுதிகளைத் தேட வேண்டியிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றார். மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார், ஆனால் அதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கராச்சியில் தீப்பிடித்த முதல் வணிக வளாகம் குல் பிளாசா அல்ல. சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் பாதுகாப்பு குறைபாடுகள், போதுமான தீயணைப்பு அமைப்புகள் இல்லாதது, அதிக மின்சுமை கொண்ட மின் அமைப்புகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாக இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறீப்பிடத்தக்கது.
Read More : 21 பேர் பலி; பலர் காயம்; 2 அதிவேக ரயில்கள் மோதி பயங்கர விபத்து..! ஸ்பெயினில் பெரும் சோகம்..!



