திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் 18 வயதான வீட்டு பணிப்பெண்ணை இரவு பகல் பார்க்காமல் வேலை வாங்கியதுடன் அவரது கை, கன்னம், முதுகு ஆகிய பகுதியில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், தாக்குதல், மிரட்டல், குழந்தை பாதுகாப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி, ”என் மகனுக்கு திருமணமாகி 7 வருடங்களாக அவரது குடும்பத்தோடு திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது தான் எங்களை பார்க்க வருவார்கள். அவரது வீட்டில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.
நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள்” என்றார்.