உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் 27 வயது முஸ்லிம் இளைஞரும் அவரது 22 வயது இந்து காதலியும், பெண்ணின் சகோதரர்களால் கட்டிப்போடப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த ஆணவக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அர்மான், கடந்த சில மாதங்களாக மொராதாபாத்தில் வசித்து வந்தார். அப்போஒது அவர் காஜலை சந்தித்து பேச தொடங்கி உள்ளார்.. ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இந்த வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த காதல் உறவுக்கு காஜலின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் அந்த உறவை முறித்துக் கொள்ளுமாறு காஜலிடம் வலியுறுத்தி உள்ளனர்..
இந்த சூழலில் 3 நாட்களுக்கு முன்பு, அர்மான் மற்றும் காஜல் இருவரும் காணாமல் போயினர். அர்மானின் தந்தை ஹனீஃப், தனது மகனைக் காணவில்லை என்று புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காஜலும் காணாமல் போனது தெரியவந்தது. அவரது சகோதரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவர்கள் இருவரும் தம்பதியைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், உடல்களை புதைத்த இடத்தையும் காவல்துறைக்கு காட்டினர். நேற்று மாலை உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அர்மானின் மற்றும் காஜலின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு, பின்னர் அவர்களை வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் சட்பால் அன்டில் பேசிய போது, “விசாரணையின் போது, பெண்ணின் சகோதரர்கள்தான் அவர்களைக் கொன்றது தெரியவந்தது. சகோதரர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, நாங்கள் உடல்களை மீட்டெடுத்தோம். கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியும் மீட்கப்பட்டது,” என்று கூறினார்..
பெண்ணின் மூன்று சகோதரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களில் இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் குற்றம் ஒரு வகுப்புவாத பதற்றத்திற்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள காவல்துறை, தம்பதியினர் வசித்த கிராமத்தில் பலத்த பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தியுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அர்மானின் சகோதரி இதுகுறித்து பேசிய போது “ அவருக்கும் காஜலுக்கும் இடையே இருந்த காதல் உறவு பற்றி தங்களுக்குத் தெரியாது என்றார். “அவர் நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் வந்தார்,” என்று கூறினார்.
Read More : அடல் ஓய்வூதியத் திட்டம் 2030-31 வரை நீட்டிப்பு: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மோடி அரசு சொன்ன குட்நியூஸ்..!



