அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று குழந்தை ராமர் சிலையை சுமந்து சென்று கருவறையில் பிரதிஷ்டை செய்யய உள்ளார். இந்த விழாவில் சுமார் 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் நாளை அரை நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 22 ஆம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் விடுமுறை அறிவித்துள்ளன.
கோவா மாநிலத்தில் ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். இதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய மெஜஸ்டிக் பிரைட் குழுமத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் நாயக், எல்லோரும் அதைச் செய்கிறார்கள், நாம் ஏன் அதைச் செய்யக்கூடாது. ராமர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் ஊழியர்கள் பிரார்த்தனை செய்வதற்கும், ராமர் சிலை பிரதிஷ்டையின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதற்கும் நேரம் கொடுக்கிறோம் என்று கூறினார்.