தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சிதறிக் கிடக்கும் அதிமுக-வின் பல்வேறு பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார்.
கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக பதிலளித்த அவர், “நான் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது என்பது இறைவனின் கையில் உள்ளது என்றும் கட்சியின் பல்வேறு சக்திகள் ஓரணியில் திரண்டால் மட்டுமே பலமான சவாலை எதிர்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட இதர தலைவர்கள் யாரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்பதையும் அவர் கூறினார்.
அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலை தவிர்த்த ஓபிஎஸ், “விஜய்யின் விமர்சனங்களுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும்” என்று கூறினார். ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஒருபுறம், புதிய வரவுகளின் விமர்சனங்கள் மறுபுறம் என அ.தி.மு.க.வை சுற்றியுள்ள அரசியல் நகர்வுகள் 2026 களத்தை இப்போதே பரபரப்பாக்கியுள்ளன.



