சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கண்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டின் மீது திரும்பியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி விலையேற்றத்தைக் கண்டுள்ள தங்கம், இன்று சென்னையில் 22 காரட் ஒரு சவரன் ரூ.1,22,640 என்ற இமாலய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.4,00,000 என்ற நிலையை எட்டி இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 100 டாலர்களை கடந்துள்ளதும், தங்கம் 5000 டாலர்களை நெருங்குவதும் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது. இந்தச் சூழலில், வரும் ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி (Import Duty) குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2024 ஜூலை பட்ஜெட்டில் வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது விலைச் சரிவுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், சந்தை வல்லுநர்கள் இந்த முறை பெரிய அளவிலான வரி குறைப்பு இருக்காது என்றே கணித்துள்ளனர். ஏற்கனவே இறக்குமதி வரி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், மேலும் 1 அல்லது 2 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இது தற்போதைய உச்சக்கட்ட விலையேற்றத்திற்குப் பெரிய தீர்வாக இருக்காது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு விலையில் சிறு மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் பலரும் தங்களின் நகை வாங்கும் திட்டத்தைப் பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளிப்போட்டு வருகின்றனர்.
விலை ஏற்ற இறக்கமாகவே தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தினத்தில் நிதியமைச்சர் வழங்கப்போகும் அந்த நிவாரண செய்தி தங்கத்தின் மினுக்கத்தை குறைக்குமா அல்லது இன்னும் அதிகரிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.



