தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான அரசியல் முரண்பாடுகள் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன. ராமதாஸ் ஒரு திசையிலும், அன்புமணி ராமதாஸ் வேறொரு திசையிலும் காய்களை நகர்த்தி வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவுடன் கைகோர்க்க அன்புமணி விரும்புவதாக தகவல் கசியும் நிலையில், ராமதாஸ் அவர்கள் திமுகவுடன் நெருக்கம் காட்ட முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக கூட்டணியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கடுமையான எதிர்ப்பால், பாமகவை உள்ளே இழுக்க திமுக தலைமை தயக்கம் காட்டியதாக தெரிகிறது.
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட்ட சூழலில், ராமதாஸ் தரப்பு தனது அடுத்த இலக்காக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை குறிவைத்தது. வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் பலமான வாக்கு வங்கியையும், விஜய்க்கு இருக்கும் இளைய தலைமுறை செல்வாக்கையும் இணைத்தால், அது அன்புமணி மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் ஒரு வலுவான அரசியல் சவாலாக அமையும் என ராமதாஸ் கணக்கு போட்டார். இதற்காக தவெக தரப்பிடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும், இந்த அரசியல் சதுரங்கத்தில் ஒரு திடீர் திருப்பமாக, ராமதாஸ் தரப்பு திமுகவிடமிருந்து தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்டு, அதே சமயம் தவெகவுடன் கூட்டணி அமைக்க முற்படுவதாக விஜய்க்கு ரகசிய தகவல் எட்டியுள்ளது. திமுகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதையே தனது பிரதான இலக்காக கொண்டுள்ள விஜய், இந்த ‘இரட்டை நிலைப்பாட்டை’ அறிந்து கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திமுகவின் நிதியுதவியுடன் தன்னிடம் கூட்டணிக்கு வரும் வியூகத்தை விஜய் முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்டார்.
இதன் விளைவாக, பாமக உட்பட எந்தவொரு கட்சியுடனும் தாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து, ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. விஜய்யின் இந்த தீர்க்கமான முடிவால், திமுக மற்றும் தவெக என இரு தரப்பையும் ஒரே நேரத்தில் கையாள நினைத்த ராமதாஸின் அரசியல் திட்டம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், பாமகவின் இந்த தடுமாற்றம் அவர்களுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.



