மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரின் உடல் வியாழக்கிழமை அன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது… அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துக்கமடைந்த மக்கள் அந்த மூத்த தலைவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மற்றும் மகன்கள் பார்த்த், ஜே ஆகியோர் தகனத்தின் போது உடனிருந்தனர். அவரது உடல் மைதானத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ஆதரவாளர்கள் “அஜித் தாதா அமர் ரஹே” (அஜித் தாதா அமரராக வாழ்க) போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, காலையில், நூற்றுக்கணக்கான துக்கமடைந்த மக்கள், அஜித் பவாரின் சொந்த கிராமமான கேட்வாடியில் உள்ள அவரது இல்லத்திற்குத் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். புனே மாவட்டத்தில் உள்ள கேட்வாடி மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் இணைந்து, “அஜித் டாடா மீண்டும் வாருங்கள் என்று முழக்கமிட்டபடி இல்லத்திற்கு வெளியே கூடினர். துக்கம் அனுசரித்த பலரும், பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, “அவரைப் போன்ற ஒரு தலைவர் மீண்டும் பிறக்க மாட்டார்” என்று கூறினர்.
முக்கியத் தலைவர்கள் இறுதி அஞ்சலி
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராம் தாஸ் அதாவலே, பாஜக தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் பவாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தலைவர்களில் அடங்குவர். இதைத் தொடர்ந்து, பார்த்த் மற்றும் ஜே ஆகியோர் தங்கள் தந்தையின் இறுதி சடங்குகளை செய்தனர்..
பாராமதி விமான விபத்து
மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்றபோது ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்ய பாராமதிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
வெறும் 200 மீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானதில், பவார் மற்றும் விமானத்தில் இருந்த மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றவர்கள், 15,000 மணிநேர விமான அனுபவம் கொண்ட கேப்டன் சுமித் கபூர், 1,500 மணிநேர விமான அனுபவம் கொண்ட துணை விமானி கேப்டன் ஷாம்பவி பதக், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (PSO) விதிப் ஜாதவ் மற்றும் விமானப் பணிப்பெண் பிங்கி மாலி ஆகியோர் ஆவர்.
கருப்புப் பெட்டி மீட்பு
இதனிடையே, விமான விபத்து தொடர்பாக போலீசார் தற்செயல் மரண அறிக்கை (ADR) வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். புதன்கிழமை முன்னதாக, இந்த விபத்திற்கும் அஜித் பவாரின் மரணத்திற்கும் வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை விவரித்து அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மோசமான பார்வைத் திறன் காரணமாக ஒருமுறை தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் மேலே பறந்த பிறகு, அந்த விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், இறுதியாக அனுமதி கிடைத்த பிறகும், அது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்தவித உறுதிப்படுத்தல் தகவலையும் அளிக்கவில்லை. சில கணங்களுக்குப் பிறகு, ஓடுபாதையின் ஓரத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. லியர்ஜெட் விமானத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ (விமானத் தரவுப் பதிவி மற்றும் காக்பிட் குரல் பதிவி ஆகியவற்றை உள்ளடக்கியது) மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
அகமதுநகர் மாவட்டத்தின் தியோலாலி பிரவரா கிராமத்தில் ஜூலை 22, 1959 அன்று பிறந்த அஜித் பவார், அடித்தட்டு மக்களுடனான தனது தொடர்பு மற்றும் நீண்ட அரசியல் வாழ்க்கைக்காக பரவலாக அறியப்பட்டவர். பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என பல அரசாங்கங்களில் அஜித் பவார் 6 முறை துணை முதல்வர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தம் நம்பிக்கையின் அடையாளம்.. பிரதமர் மோடி பெருமிதம்..!



