சீனாவில் ஒரு நபர் பழைய சிம் கார்டுகளிலிருந்து பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்த சம்பவம், தற்போது உலக அளவில் இணையவாசிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது. மின்னணு கழிவுகளுக்குள்ளும் புதையல் ஒளிந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ள கியாவோ என்ற நபரின் இந்த முயற்சி, பெரும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த கியாவோ, சுமார் இரண்டு டன் எடையுள்ள பழைய சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரித்துள்ளார். சிம் கார்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் சிப்களில் துருப்பிடிக்காமல் இருப்பதற்காகவும், மின்சாரத்தை வேகமாக செலுத்தவும் மிக மெல்லிய அளவில் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்திய கியாவோ, வேதியியல் எதிர்வினைகள் அதிகப்படியான வெப்பப்படுத்துதல் மற்றும் துல்லியமான வடிகட்டுதல் போன்ற அறிவியல் முறைகளைக் கையாண்டுள்ளார். இந்தச் சிக்கலான செயல்முறையின் முடிவில், யாரும் எதிர்பாராத விதமாக சுமார் 191 கிராம் தூய தங்கத்தைப் பிரித்தெடுத்துள்ளார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 27 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக தளங்களில் பழைய சிம் கார்டுகளுக்கான மவுசு திடீரென அதிகரித்துள்ளது. தங்க சுத்திகரிப்பு கருவிகள் என்ற பெயரில் பல உபகரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இருப்பினும், இந்தச் செயல்முறை பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும், இதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என கியாவோவே எச்சரித்துள்ளார். உரிய பாதுகாப்பு கவசங்கள் இன்றி இதைப் பரிசோதிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
மேலும், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் உரிய அரசு அங்கீகாரம் மற்றும் உரிமம் இன்றி மின்-கழிவுகளை சுத்திகரிப்பதும், அதிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். முறையாக பயிற்சி பெறாமல் பேராசைப்பட்டு இத்தகைய முயற்சிகளில் இறங்குவது பணத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருசேர வீணடிக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
Read More : ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..!! வட்டி மட்டுமே இவ்வளவா..? பட்ஜெட் சொல்லும் பகீர் தகவல்..!!



