திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலாளர் அறையில் இருந்த அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல், கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரபு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே தன்னை சிலர் பின் தொடர்ந்து வருவதாக காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு செய்தியாளர் புகார் அளித்து வந்துள்ளார்.
ஆனால், காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, தாக்குதல் நிகழும் சற்று முன் கூட காவல்துறையினரிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் பேச்சும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்லடத்தில் தாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திக்குறிப்பில், “தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேசபிரபு காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.