உடல் உழைப்பற்ற நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் செய்யும் ஒரு மிகச்சிறிய மாற்றம் நம் ஆயுளைப் பல ஆண்டுகள் நீட்டிக்கும் வல்லமை கொண்டது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 2026-ஆம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற ‘லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒருவர் தனது தினசரி வழக்கத்தில் கூடுதலாக வெறும் 5 நிமிடங்கள் மட்டும் நடப்பாரேயானால், அவர் அகால மரணமடையும் அபாயம் சுமார் 10 சதவீதம் வரை குறைகிறது.
அமர்ந்தே இருப்பவர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை :
இன்றைய ஐடி கலாச்சாரம் மற்றும் அலுவலக பணிகளில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது ‘அமைதியான கொலையாளி’ என்று அழைக்கப்படும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதனைத் தவிர்க்க, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து சில நிமிடங்கள் நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 60 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எளிய நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பதோடு, இதய தசைகளுக்குத் தேவையான வலிமையையும் அளிக்கிறது.
மன ஆரோக்கியம் :
நடைப்பயிற்சி என்பது உடல் ரீதியான பலன்களை தாண்டி, மன ரீதியாகவும் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது. நாம் நடக்கும்போது உடலில் ‘எண்டோர்பின்கள்’ (Endorphins) எனப்படும் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், முறையான நடைப்பயிற்சி செரிமான மண்டலத்தைத் தூண்டி, எலும்புகள் மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்துகிறது.
எளிய மாற்றங்கள் :
ஜிம்மிற்குச் சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாதவர்கள் கூட, அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற முடியும். உதாரணமாக, லிஃப்ட்டை தவிர்த்துப் படிக்கட்டுகளை பயன்படுத்துவது, வாகனங்களைச் சற்றுத் தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து செல்வது போன்ற சிறு இலக்குகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும். இத்தகைய எளிய வாழ்வியல் மாற்றங்கள் நம்மைத் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்து, நீண்ட கால ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமாக அமையும்.



