தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தாண்டி, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் மற்றும் கணிசமான மானியத்தைப் பெற முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றாலும், பெண்களுக்குச் சிறப்புச் சலுகையாக 45 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, தொழிலின் மொத்த மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்) வரை அரசு மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள தொகையை வங்கிகள் கடனாக வழங்க முன்வருகின்றன.
தொழில் வாரியான கடன் மற்றும் ஆவணங்கள் :
தொழிலின் தன்மையைப் பொறுத்து கடன் தொகை மாறுபடும். உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும், சிறு வணிகம் அல்லது வியாபாரம் செய்ய 1 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ், இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தாங்கள் தொடங்கப்போகும் தொழில் குறித்த திட்ட அறிக்கை (Project Report) மற்றும் விலைப்புள்ளி (Quotation) விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை :
ஆர்வமுள்ள பெண்கள் www.msmeonline.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு அதன் நகலை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் (DIC) ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்த பிறகு நேர்காணலுக்கு அழைப்பார்கள். அதில் தேர்வாகும் நபர்களுக்குத் தொழில் தொடங்கத் தேவையான வங்கிக் கடன் வசதி செய்து தரப்படும்.



