3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர், சிலர் திமுகவிற்கும், வேறு சிலர் தவெகவுக்கும் சென்றுவிட்டனர்.
ஓ.பி.எஸ்-ன் “அரசியல் சாணக்கியத்தன்மை இல்லாமை, பாஜக-வை அதிகமாகச் சார்ந்திருப்பது மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தயங்குவது” ஆகியவை அவரது ஆதரவுத் தளம் படிப்படியாகச் சிதைந்ததற்கு வழிவகுத்துள்ளன என்று அவரின் முன்னாள் ஆதரவாளர்களே கூறுகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ்-ன் முடிவெடுக்கும் திறமையின்மையே பலரை அவரை விட்டு விலகும்படி செய்துள்ளது..
அதிமுக திருச்சி மண்டல முன்னாள் ஐடி விங் செயலாளர் வினுபாலன், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்த வினுபாலன், அவராலேயே நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார். அதேநேரம், ராமநாதபுரம் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஐடி விங், மகளிர் அணி நிர்வாகிகளும் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையிலும் எந்த முடிவையும் தெளிவாக எடுக்காததால் ஓபிஎஸ் அணி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களின் தொடர் வெளியேற்றம் வரும் தேர்தலில் ஓபிஎஸ்-ன் அரசியல் செல்வாக்கிற்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது..



