மத்திய பட்ஜெட் 2026-ல் சாமானிய மக்களின் சமையலறை தேவைகளை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குறிப்பாக ஏழை எளியப் பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்குப் புகையில்லா சமையல் சூழலை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, மத்திய அரசு 9,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், நாட்டின் குக்கிராமங்களிலும் எல்பிஜி வசதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நிம்மதியை தந்துள்ளது.
மொத்த ஒதுக்கீட்டில் 1,500 கோடி ரூபாய் நேரடிப் பலன் பரிமாற்றத்திற்காக (DBT) தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயனாளிகளுக்கான நிதி உதவி எவ்வித கசிவுமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே சென்றடையும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படுவதுடன், சிலிண்டர், ரெகுலேட்டர், குழாய் மற்றும் அடுப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கட்டணமின்றி இலவசமாகவே வழங்கப்படும்.
இதுவரை சுமார் 10.41 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள நிலையில், புதிய நிதி ஒதுக்கீடு இந்தப் பயனாளிகளின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விறகு அடுப்பு புகையினால் ஏற்படும் சுவாசப் பாதிப்புகளில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இதுவரை எரிவாயு இணைப்பு இல்லாத தகுதியுள்ள பெண்கள், உஜ்வாலா யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை வழங்கலாம். இதற்கு ஆதார் அட்டை, முகவரி சான்று மற்றும் ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்கள் அவசியமாகும். சமர்ப்பிக்கப்படும் விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், மிக விரைவாகவே புதிய இணைப்பு வழங்கப்படும்.



