மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.. இந்த பலி எண்ணிக்கை தற்போது 16-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. லும் பலர் சிக்கிக்கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். சுரங்கத்தில் இருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக ஷில்லாங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியை காவல்துறை நாடியதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குமார் தெரிவித்தார்.
சட்டவிரோதமாகச் செயல்படுவதாக நம்பப்படும் அந்த இடத்தில் நிலக்கரி சுரங்கப் பணிகள் நடைபெற்றபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தச் சுரங்கம் சட்டவிரோதமானதா என்று கேட்டபோது, ”ஆம், அப்படித்தான் தெரிகிறது” என்று அந்த அதிகாரி கூறினார். வெடிவிபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் குமார் மேலும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கடுமையான பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி, 2014-ஆம் ஆண்டில் மேகாலயாவில் ‘எலி வளைச் சுரங்கம்’ முறை மற்றும் பிற அறிவியலுக்குப் புறம்பான சுரங்க முறைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும், இம்முறைகள் மூலம் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதற்கும் அது தடை விதித்தது. எலி வளைச் சுரங்கம் முறையில், தொழிலாளர்கள் உள்ளே சென்று நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக, பொதுவாக 3 முதல் 4 அடி உயரம் கொண்ட குறுகிய சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன.
பின்னர் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை உறுதி செய்தது. முறையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அறிவியல் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம் மட்டுமே நிலக்கரி சுரங்கப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? வெளியுறவு அமைச்சகம் முக்கிய தகவல்..!



