சென்னையில் காகங்களின் மர்ம மரணத்தை தொடர்ந்து, ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக சுகாதாரத் துறை தற்போது பொதுமக்களுக்கு அவசர காலப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் பறவைகளை கையாளுதல் தொடர்பாக பல முக்கிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் அதிக வெப்பநிலையில் அழிந்துவிடும் என்பதால், இறைச்சி மற்றும் முட்டை உணவுகளை நன்றாக வேகவைத்து (Well-cooked) உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பலர் விரும்பி உண்ணும் ‘ஆஃப் பாயில்’ (Half Boil) மற்றும் பச்சையாக முட்டைகளை சேர்த்துச் செய்யப்படும் உணவு வகைகளைத் தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சரியாக சமைக்கப்படாத இறைச்சி மூலம் வைரஸ் மனித உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், உணவகங்கள் மற்றும் வீடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
மனிதர்களுக்கு இந்த தொற்று பரவும் பட்சத்தில் கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு வார்டுகள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பறவை இறைச்சி கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பறவைகளை நேரடியாக கையாளுபவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்கள் பகுதிகளில் காக்கை, புறா உள்ளிட்ட ஏதேனும் பறவைகள் கூட்டமாகவோ அல்லது அசாதாரணமான முறையிலோ இறந்து கிடப்பதை கண்டால், உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Read More : ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்..!! இனி பொருட்களுக்கு பதில் பணம்..!! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா..?



