பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது..
இதனிடையே பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு செய்தது.
இந்த நிலையில் இந்த சீராய்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் மிகத் தெளிவாக அன்புமணியே பாமகவின் தலைவர் என்றும், அவருக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
ராமதாஸ் தரப்பு தொடர்ந்த மறு ஆய்வு மனுவுக்கு எதிராக ஆணையம் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில், “பாமகவின் தலைவராக அன்புமணிதான் இருக்கிறார்” என்று மீண்டும் உறுதி செய்துள்ளது.
கட்சியின் அமைப்பு ரீதியான ஆவணங்கள், பதிவு விவரங்கள், உறுப்பினர் பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரை அன்புமணியின் தலைமை பதவிக்காலம் உள்ளதாகவும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.



