சர்க்கரை நோயாளிகள் தங்களது தினசரி உணவு முறையில் சில முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பிஞ்சு, சாம்பல் பூசணி மற்றும் சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
தினமும் ஒரு வகை கீரையைப் பொரியலாக சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மையை தரும். அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா, முசுமுசுக்கை கீரை, வல்லாரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி மற்றும் துத்தி கீரை ஆகிய கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றை உணவில் தொடர்ந்து சேர்த்து வரலாம்.
என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்..?
* நாவல்பழம் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றைத் தாராளமாக சாப்பிடலாம்.
* மலைவாழைப்பழத்தை வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
* பேரிச்சம்பழம், கொய்யா, பப்பாளி, ஆப்பிள் மற்றும் விளாம்பழம் போன்ற பழங்களை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஒரே நாளில் அனைத்துப் பழங்களையும் கலந்து சாப்பிடக் கூடாது; ஏதேனும் ஒரு பழத்தை மட்டுமே அன்றைய தினத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



