கோயிலுக்கு செல்வது என்பது வெறும் தரிசனம் மட்டுமல்ல; அது நம் ஆன்மாவை இறைசக்தியுடன் இணைக்கும் ஒரு நுட்பமான பயணம். அந்தப் பயணம் தொடங்கும் இடமே ராஜகோபுரம் தான். எந்தவொரு கோவிலுக்கு சென்றாலும் முதலில் அதன் கம்பீரமான கோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைவதே மரபு. குறிப்பாக சிவபெருமான் வீற்றிருக்கும் சிவாலயங்களில், வழிபாட்டை எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவான ஆன்மீக வழிமுறைகள் உள்ளன.
யாரை முதலில் வணங்க வேண்டும்..?
சிவாலயத்திற்குள் நுழைந்ததும் முதல் வணக்கம் நம் தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானுக்குத் தான் அமைய வேண்டும். “ஓம் கணபதயே நமஹ” என்று துதித்து வழிபாட்டை தொடங்கி, பின்னர் இறைவனின் ஆற்றல் குடிகொண்டுள்ள கொடிமரத்தை வணங்க வேண்டும். இதனை தொடர்ந்து, ஈசனின் வாகனமான நந்தி தேவரிடம் அனுமதி பெற்று, நம் வேண்டுதல்களை முன்வைக்க வேண்டும். பின்னர், குடும்ப நலன் மற்றும் மன அமைதிக்காக அன்னை அம்பிகையைத் தரிசித்துவிட்டு, கருவறையில் வீற்றிருக்கும் மூலவரை சரணடைய வேண்டும். மூலவரைத் தரிசிக்கும்போது “ஓம் நமசிவாய” எனும் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிப்பது உன்னதமான பலன்களை தரும்.
மூலவரை தரிசித்த பிறகு, தட்சிணாமூர்த்தி (ஞானம்), முருகப் பெருமான் (வெற்றி), சண்டிகேஸ்வரர் (பாவ நிவாரணம்), பைரவர் (பயம் நீங்குதல்) மற்றும் நவகிரகங்களை வரிசையாக தரிசிக்க வேண்டும். மூலவர் சன்னதியை வலம் வரும்போது (பிரதட்சணம்) 3 அல்லது 5 முறை வலம் வருவது சிறப்பு. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சிவாலயத்தை இடது பக்கமாகத்தான் சுற்றி வர வேண்டும். அதிலும் பிரதோஷ காலங்களில் ‘சோமசூக்த’ எனும் முறையிலேயே வலம் வர வேண்டும் என்பது ஆகம விதி.
வழிபாட்டை நிறைவு செய்யும் முறை :
அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பிறகு, மீண்டும் கொடிமரத்திற்கு முன்பு வந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். ஆண்கள் தரையில் முழுமையாக விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். வழிபாட்டின் இறுதியாக, கொடிமரத்தின் அருகிலோ அல்லது மண்டபத்திலோ சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது அவசியம்.
அந்த நேரத்தில், கருவறையில் கண்ட ஈசனின் திருவுருவத்தை மனக்கண்ணில் நிறுத்தி, இறைவனிடம் அமைதியாக உரையாடுங்கள். அவ்வாறு செய்யும்போது, பல நாட்களாகத் தீராத குழப்பங்களுக்கு தெளிவும், மன அமைதியும் கிடைப்பதை நீங்கள் உணர முடியும். இது ஈசன் உங்களுக்கு மிக அருகிலேயே இருந்து உங்களை வழிநடத்துகிறார் என்பதற்கான சான்றாகும். இந்த முறைப்படி வழிபடும்போது, ஈசனின் கருணை உங்கள் மீது எப்போதும் நிலைத்திருக்கும்.



