தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த முறை 40-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரப்படுவதோடு, இரண்டு ராஜ்யசபா இடங்கள் மற்றும் மிக முக்கியமாக ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளுக்கு திமுக உடன்படாத காரணத்தால், பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் திமுக காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
திமுகவுடனான இந்த மோதல் போக்கிற்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தரப்பிலிருந்து காங்கிரஸிற்கு ஒரு கவர்ச்சிகரமான அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. காங்கிரஸிற்கு சுமார் 60 முதல் 70 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், மிக முக்கியமாக காங்கிரஸ் நீண்ட காலமாக கேட்டு வரும் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கைக்கு விஜய் தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தவெக-வை ஒரு ‘இயற்கையான கூட்டணி’ என்று கருதும் காங்கிரஸின் இளைய தலைமுறையினர், இந்த மாற்றுக் கூட்டணியை நோக்கி நகர்வதே கட்சிக்கு எதிர்காலத்தை உருவாக்கும் என ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் முடிவு என்ன?
காலங்காலமாக தொடர்ந்து வரும் திமுக உடனான பிணைப்பை ராகுல் காந்தி தொடர்வாரா? அல்லது அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் தவெக-வின் புதிய கூட்டணியைத் தேர்ந்தெடுப்பாரா? என்பது இன்றைய ஆலோசனையின் முடிவிலேயே தெரியவரும். ஒருவேளை காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றினால், அது தமிழகத்தின் அரசியல் களத்தையே மாற்றி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Read More : “தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கா”..? பிரேமலதா விஜயகாந்துக்கு சவால் விட்ட ப்ளூ சட்டை மாறன்..!!



