தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தில், தொகுதிப் பொறுப்பாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் வெறும் 65 நாட்களே உள்ளன. எனவே நேரத்தை வீணடிக்காமல் களப்பணிகளைத் தீவிரப்படுத்துங்கள்” என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் மூன்றாவது வாரத்திலேயே தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தெரிகிறது. கோடை காலத்தின் உச்சகட்ட வெயிலை தவிர்க்கவே இத்தகைய முன்கூட்டிய திட்டமிடல் இருக்கலாம் என கருதப்படுகிறது.



