தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், தனது நீண்டகால அரசியல் சகாவான செங்கோட்டையனின் இந்த முடிவை, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மிகுந்த மனவேதனையுடனும், அதேசமயம் கடும் விமர்சனங்களுடனும் சாடியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்துப் பேசுகையில், “அதிமுகவில் அமைச்சராகவும், கட்சியின் அசைக்க முடியாத தூணாகவும், எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். ஆனால், இன்று ஒரு புதிய கட்சியில் போய் சேர்ந்துவிட்டு, அங்கு 4-வது அல்லது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவருக்காக நான் கண்ணீர் விடுகிறேன்” என ஆதங்கப்பட்டார். ஒரு மூத்த தலைவருக்கு இது போன்றதொரு தாழ்ந்த நிலை தேவையா? என்றும் கூறியுள்ளார்.
விஜய்க்கு ‘புரட்சி தளபதி’ என்ற பட்டத்தைச் செங்கோட்டையன் வழங்க வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டிய சீனிவாசன், இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு அவர் செல்வார் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை. அதிமுகவில் மரியாதைக்குரிய இடத்தில் இருந்தவர், இப்போது தகுதி இழந்து ‘டம் டம்’ என்று தாளம் அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்” என சாடினார். ஒரு காலத்தில் தங்களுக்குத் தோளோடு தோள் நின்ற ஒரு பெரிய மனிதர், இன்று தடம் மாறிச் சென்றது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.



