மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM), இந்திய கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை வேரோடு ஒழிப்பதையும், சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் தனது முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் கடன் வசதிகளைப் பெற வேண்டுமெனில், ஒரு சுயஉதவிக் குழு குறைந்தது 6 மாதங்கள் முறையாக செயல்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பஞ்சசூத்திரங்கள் எனப்படும் முறையான கூட்டங்கள், சேமிப்பு, உள்கடன் வழங்கல், கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வரவு-செலவு கணக்குகளைப் பராமரித்தல் ஆகிய ஐந்து விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நபார்டு (NABARD) வங்கியின் தரவரிசை அடிப்படையில் தகுதி பெறும் குழுக்களுக்கு, ஆரம்பக்கட்ட ஊக்கத் தொகையாக ‘சுழல் நிதி’ (Revolving Fund) மற்றும் சமூக முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது.
நாட்டில் பின்தங்கியதாக கண்டறியப்பட்ட 250 மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வெறும் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதில் சிறப்பாகச் செயல்பட்டு, கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்குக் கூடுதல் சலுகையாக 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு, இறுதி வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை, வங்கிகளின் வழக்கமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டாலும், மாநில அரசுகளின் தலையீட்டால் வட்டிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்பு அடைய வேண்டும் என்பதற்காக, ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்தவிதமான பிணையும் (Collateral) தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இத்திட்டம் ‘தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்’ என்ற பெயரில் 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற நிதிப் பகிர்வு அடிப்படையில் இணைந்து, கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : இதெல்லாம் தேவையா..? செங்கோட்டையனுக்காக கண்ணீர் விடுகிறேன்..!! வறுத்தெடுத்த திண்டுக்கல் சீனிவாசன்..!!



