கரூர் மாவட்ட அரசியல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்தப் பகுதியில், அக்கட்சியின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழா, கொங்கு மண்டல அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அதிமுக தலைமையின் செயல்பாடுகளில் நிலவி வந்த அதிருப்தியே, துரைமுருகனின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னணியாக சொல்லப்படுகிறது.
வெறுமனே கட்சியில் இணைந்ததுடன் நின்றுவிடாமல், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நேரடி சவால் விடுத்துள்ளார் MDA துரைமுருகன். வரும் நாட்களில் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ள அவர், அதில் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர்கள் பலரையும் திமுகவில் இணைக்கப் போவதாகக் கூறி அதிரடி கிளப்பியுள்ளார்.
அதிமுகவின் கோட்டையாக இருந்த பகுதிகளில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது, அக்கட்சியின் மாவட்ட தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வியூகங்களால் திமுக தனது பிடியை கரூரில் வலுவாக்கி வருகிறது. MDA துரைமுருகனின் அடுத்தகட்ட நகர்வுகள் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எந்த மாதிரியான சவால்களை உருவாக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



