பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.
அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பிய நிலையில், இந்த 4 ஆண்டுகால பயண அறிக்கையும், அதற்கான செலவு விவரங்களும் பேசுபொருளாகியுள்ளன. இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பிரதமர் மோடி மொத்தம் 43 முறை வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இதில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அவர் விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குத் தலா 4 முறையும், பிரான்ஸ் நாட்டிற்கு 3 முறையும் அவர் பயணம் செய்துள்ளார். இவற்றுடன் பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குத் தலா 2 முறை சென்று வந்துள்ளார். மொத்த பயணச் செலவினங்களை கணக்கிடுகையில், அமெரிக்காவிற்கான பயணங்களே அதிக பொருட்செலவை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவுக்கு மேற்கொண்ட 4 பயணங்களுக்காக மட்டும் 74.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பயணச் செலவில் 16 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணச் செலவுகள் தலா 9 சதவீதமாக உள்ளன. இருப்பினும், தனிப்பட்ட ஒரு பயணத்திற்காக செய்யப்பட்ட அதிகபட்ச செலவு என்று பார்த்தால், அது கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மேற்கொண்ட பிரான்ஸ் பயணத்தை சேரும். இந்த ஒரு பயணத்திற்கு மட்டும் 25.5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இந்தப் பயணத்தின் போது செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு, மார்சேல் நகரில் இந்தியத் தூதரகம் திறப்பு மற்றும் ITER அணுக்கரு இணைவுத் திட்டப் பார்வை போன்ற முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குச் சென்ற பயணத்திற்கு 22.8 கோடி ரூபாயும், 2021 செப்டம்பரில் மேற்கொண்ட அமெரிக்க பயணத்திற்கு 19.6 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றியது முதல் ‘குவாட்’ உச்சி மாநாடு வரை பல்வேறு முக்கிய நகர்வுகள் இந்தப் பயணங்களின் போது நிகழ்ந்தன. சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலை ஓங்கி ஒலிக்க செய்யவும், உலக தலைவர்களுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் இத்தகைய பயணங்கள் இன்றியமையாதவை என்றாலும், அதற்காக செய்யப்படும் கோடி கணக்கான செலவினங்கள் மக்கள் மத்தியில் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.



