நவீன டிஜிட்டல் உலகில் இணையம் என்பது சுவாசிக்கும் காற்று போல அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போன்களில் டேட்டா ரீசார்ஜ் செய்வது முதல் வீடுகளில் அதிவேக வைஃபை வசதி வரை 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பதே பலரது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் தூங்க செல்லும் போது கூட வைஃபை ரௌட்டரையோ அல்லது மொபைல் டேட்டாவையோ ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நம்மில் பலரது பழக்கம். இவ்வாறு மின் காந்த அலைகளின் சூழலிலேயே உறங்குவது பாதுகாப்பானது தானா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பொதுவாக வைஃபை மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளில் இருந்து வெளிவரும் அலைகள் ‘அயனியாக்கப்படாத கதிர்வீச்சு’ (Non-Ionizing Radiation) பிரிவை சார்ந்தவை. அதாவது, எக்ஸ்-ரே போன்ற கதிர்வீச்சுகளை போல இவை மனித உடலின் டிஎன்ஏ-வை நேரடியாகச் சிதைக்கும் வலிமை கொண்டவை அல்ல. வீடுகளில் பயன்படுத்தப்படும் வைஃபை சாதனங்கள் மிகக் குறைந்த அளவிலான அலைகளையே வெளியிடுகின்றன என்பதால், உடல் ரீதியாக இவை நேரடி தீங்குகளை விளைவிப்பதாக இதுவரை எந்த அறிவியல் ஆய்வுகளும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை.
இருப்பினும், சமீபத்திய சில ஆய்வுகள் ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கின்றன. மின்சாதனப் பொருட்களில் இருந்து வெளிவரும் நுட்பமான அலைகள் மனித மூளையின் செயல்பாட்டில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஆழ்ந்த உறக்கத்திற்கு தேவையான ‘மெலடோனின்’ (Melatonin) எனும் ஹார்மோன் சுரப்பை இந்த அலைகள் சீர்குலைக்க வாய்ப்புள்ளது. இதனால் நிம்மதியான உறக்கம் பாதிக்கப்பட்டு, காலையில் எழும்போது சோர்வாக உணருதல் போன்ற ‘இன்சோம்னியா’ அறிகுறிகள் தென்படலாம்.
இணைய அலைகளால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளை விடவும், அதன் விளைவாக ஏற்படும் தூக்கமின்மையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளே மிக மோசமானவை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். போதிய உறக்கம் இல்லாதது இதய ஆரோக்கியம் முதல் மன அழுத்தம் வரை பல்வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு தூங்கச் செல்லும் போது வைஃபை ரௌட்டரை அணைத்து வைப்பதும், மொபைல் போன்களை தலைக்கு அருகில் வைக்காமல் தள்ளி வைப்பதும் சிறந்த வாழ்வியல் முறையாக பரிந்துரைக்கப்படுகிறது.
Read More : வீடுகளில் நாய் வளர்த்தால் ரூ.5,000 அபராதம்..!! வீடு வீடாக சென்று ஆய்வு..!! சென்னை மாநகராட்சி அதிரடி..!!



