மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியில் அனுசரிக்கப்படும் மகா சிவராத்திரி, வெறும் பாவ விமோசனத்திற்கான நாள் மட்டுமல்ல; அது மனித ஆன்மா தன்னைப் பரம்பொருளோடு இணைத்துக் கொள்ளும் உன்னத தருணமாகும். எத்தனையோ சிவ வடிவங்கள் இருந்தாலும், அடியும் முடியும் காண முடியாத ‘ஜோதிப்பிழம்பாக’ ஈசன் வெளிப்பட்ட ‘லிங்கோற்பவ’ காலமே சிவராத்திரியின் மையப்புள்ளியாகும். திருவண்ணாமலையில் அக்னிப் பிழம்பாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய இந்த வரலாறு, இன்றும் அனைத்துச் சிவாலயங்களின் கருவறைக்குப் பின்னால் லிங்கோற்பவ மூர்த்தியாக காட்சி தந்து நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது.
பிரம்மா அறிவின் வடிவம், திருமாலோ செல்வத்தின் நாயகன். ஆனால், வெறும் அறிவாலோ அல்லது அளவற்ற செல்வத்தாலோ இறைவனைக் கண்டுவிட முடியாது என்பதே லிங்கோற்பவ தத்துவத்தின் சாரம். அறிவும் செல்வமும் பெரும்பாலும் அகங்காரத்தையே வளர்க்கும். “நானே பெரியவன்” என்ற அந்த அகந்தை இருக்கும் வரை, ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளை உணர முடியாது. அதனால்தான், பிரம்மாவாலும் விஷ்ணுவாலும் தேடிப் பெற முடியாத சிவபெருமான், அகந்தையை விடுத்து அன்போடு உருகும் பக்தனுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறார். இதனாலேயே அவரை ‘ஆசுதோஷி’ என்று காஞ்சிப் பெரியவர் அழைக்கிறார்; அதாவது, நினைத்த மாத்திரத்திலேயே அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அவர்.
சிவராத்திரி விரதம் என்பது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு யோக பயிற்சியாகும். அதிகாலையில் நீராடி, உண்ணா நோன்பிருந்து, இரவு முழுவதும் கண்விழிப்பது புலன்களை அடக்குவதற்கான முயற்சியாகும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் நான்கு ஜாமப் பூஜைகளிலும் (ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒருமுறை) கலந்துகொள்வது விசேஷமானது. இதில் குறிப்பாக, இரவு 11:30 முதல் 1:00 மணி வரை உள்ள ‘லிங்கோத்பவ காலம்’ மிக மிக முக்கியமானது. இந்தப் ஒன்றரை மணி நேரம் விழித்திருந்து வழிபடுவது, பன்னிரு கோடி சிவலிங்கங்களை தரிசித்த புண்ணியத்தைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.
பன்னிரு திருமறைகளை ஓதியும், சிவபுராணத்தை வாசித்தும் சிவசிந்தனையிலேயே இருப்பது மனதை ஒருநிலைப்படுத்தும். புலன்களை வென்றால் மனதை அடக்கலாம்; மனதை அடக்கிவிட்டால் சிவனருள் தானாக கிட்டும். இத்தகைய விரத முறைகளால் உடல் நலம் சிறப்பதுடன், மனவளம் பெருகும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு ஒரு புதிய நண்பன் கிடைப்பான்; அந்த நண்பன் வேறு யாருமல்ல, சிவனுக்கே உரிய ‘மூன்றாவது கண்’ எனப்படும் ஞானக் கண். அந்த ஞானத்தைப் பெற்றுவிட்டால் நீங்களே சிவ சொரூபமாக மாறிவிடலாம். இதைவிட பெரிய பிறவிப்பயன் ஒரு மனிதனுக்கு வேறென்ன இருக்க முடியும்?



