சென்னையில் நடைபெற்ற பாமக மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. தொடக்கத்தில் உற்சாக மிகுதியால் மாணவர்கள் விசில் சத்தம் எழுப்பினர். இதனால், கடுப்பான அன்புமணி, “எதுக்கு இப்போ விசில்..? சத்தத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். அதன் பிறகு அரங்கில் சத்தம் குறைந்து அமைதி நிலவியது.
அதேசமயம், இந்நிகழ்ச்சியில் அன்புமணி வாசிக்க, மாணவர்கள் தங்களது வலது கரத்தை நீட்டி 10 அம்ச உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். அதில், சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொண்டு, அனைவருக்கும் சமமான, கட்டணமில்லா மற்றும் திறன்சார்ந்த கல்வியை உறுதி செய்யப் போவதாக மாணவர்கள் முழங்கினர். குறிப்பாக, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், தமிழக இளைஞர்களுக்குத் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடு (80%) இட ஒதுக்கீடு பெற்றுத் தரப் பாடுபடுவோம் என்பது போன்ற கோரிக்கைகள் அந்த உறுதிமொழியில் இடம்பெற்றன.
ஒரு சொட்டு மதுவோ, கஞ்சாவோ இல்லாத போதையற்ற தமிழகத்தை படைக்கவும், புகை மற்றும் குட்கா கலாச்சாரத்தை வேரறுக்கவும் அவர்கள் சபதமேற்றனர். மேலும், வரதட்சணை கொடுமை ஒழிப்பு, பெண் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது தொடர்பான உறுதிமொழிகளையும் மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.



