அவசர பணத்தேவை என்றதும் சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை முதலில் நாடுவது தங்கக் கடன் முறையைத்தான். ஆனால், விலைமதிப்பற்ற மற்றுமொரு உலோகமான வெள்ளியை அடமானம் வைத்து கடன் பெற நினைத்தால், பெரும்பாலான வங்கிகள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. தங்கத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வங்கிகள், வெள்ளி நகைகளைப் பெற தயங்குவது ஏன் என்பதற்குப் பின்னால் வலுவான சில பொருளாதார மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன.
இதற்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுவது வெள்ளியின் விலை நிலைத்தன்மையின்மை. தங்கத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளியின் மதிப்பு குறைவு என்பது ஒருபுறம் இருந்தாலும், அதன் சந்தை விலை மிக வேகமான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது. வங்கிகளைப் பொறுத்தவரை பிணையமாகப் பெறும் பொருளின் மதிப்பு நிலையாக இருக்க வேண்டும்.
ஆனால், வெள்ளியின் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, வழங்கப்பட்ட கடனுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது வங்கிகளுக்கு சவாலாக அமைகிறது. மேலும், தங்கத்திற்கு ‘ஹால்மார்க்’ போன்ற சர்வதேச தரநிலைகள் மிகத் துல்லியமாக இருப்பதைப் போல, வெள்ளிக்கு அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான தூய்மை அளவீடுகள் பின்பற்றப்படுவதில்லை. இது அதன் உண்மையான மதிப்பைத் தீர்மானிப்பதில் சிக்கல்களை உருவாக்குகிறது.
மற்றுமொரு முக்கிய காரணி நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு. ஒரு சிறிய அளவிலான தங்கத்திற்கு நிகரான பணத்தை வெள்ளியில் கடனாக வழங்க வேண்டுமானால், வங்கிகள் அதிக எடையுள்ள வெள்ளியைப் பாதுகாக்க வேண்டியிருக்கும். இதற்கான சேமிப்புச் செலவு மற்றும் இடவசதி ஆகியவை வங்கிகளுக்குக் கூடுதல் சுமையைத் தருகின்றன. போதாக்குறைக்கு, நுகர்வோர் மத்தியிலும் வெள்ளி அடமானக் கடன்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
இருப்பினும், சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) வெள்ளி நகைகளை அடமானமாகப் பெறுகின்றன. ஆனால், அங்கு வட்டி விகிதம் வழக்கமான தங்கக் கடன்களை விட அதிகமாக இருப்பதைக் கவனிக்க வேண்டும். வருங்காலத்தில் சந்தை நிலவரங்கள் மாறினால், வங்கிகள் வெள்ளிக்கு எனப் புதிய கொள்கைகளை வகுக்கக்கூடும் என்றாலும், தற்போதைய நிலையில் தங்கம் மட்டுமே வங்கிகளின் நம்பிக்கைக்குரிய அட்சய பாத்திரமாக திகழ்கிறது.
Read More : உலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்..? தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு..! இத்தனை லட்சம் கோடியா?



