திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் உன்னதமான பந்தம். ஆனால், இன்றும் சில ஆண்களிடம் நிலவும் பிற்போக்கான புரிதல்களும், அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளும் அந்தப் பந்தத்தை முதலிரவிலேயே சிதைத்து விடுகின்றன. கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், படித்த ஆண்களிடமும் கூட பெண்களின் உடல் குறித்த புரிதல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மென்பொருள் பொறியாளரான ராகுலுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான அனன்யாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் நடைபெற்றது. ஆனால், மகிழ்ச்சியாக தொடங்க வேண்டிய அந்த முதல் இரவில், ராகுல் கேட்ட ஒரு கேள்வி அனன்யாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
உடலுறவின் போது ரத்தம் வரவில்லை என்பதை வைத்து, அனன்யாவின் கன்னித்தன்மையை ராகுல் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஒரு விளையாட்டு வீராங்கனையான அனன்யாவுக்கு, தனது தார்மீகத்தைப் புரியவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதே பெரும் அவமானமாக தோன்றியது. இதனால் மனமுடைந்த அவர் எடுத்த விபரீத முடிவு, தடுக்கப்பட்டது. இறுதியில் காவல் நிலையம் வரை சென்ற இந்த விவகாரத்தில், கணவன் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட போதிலும், “தன்னைப் புரிந்துகொள்ளாத ஒருவருடன் வாழ்வதை விட தனிமையே மேல்” என கூறியுள்ளார்.
மருத்துவ ரீதியாக பார்த்தால், கன்னித்திரை (Hymen) என்பது ஒரு மெல்லிய சவ்வு மட்டுமே. இது விளையாட்டு, மிதிவண்டி ஓட்டுதல் அல்லது கடுமையான உடற்பயிற்சிகளின் போது இயல்பாகவே கிழிந்துவிட கூடியது. சில பெண்களுக்குப் பிறப்பிலேயே இது இல்லாமலும் இருக்கலாம். எனவே, உடலுறவின் போது ரத்தம் வருவதை மட்டுமே கன்னித்தன்மையின் அடையாளமாக கருதுவது அறியாமையின் உச்சமாகும். நவீன காலத்தில் வாழும் இளைஞர்கள் இத்தகைய பிற்போக்கு எண்ணங்களை கைவிட்டு, பெண்ணின் உடலையும் மனதையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மூடநம்பிக்கைகளால் இன்னும் பல அனன்யாக்களின் வாழ்க்கை பலியாவதை தடுக்க முடியாது.



