2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. விஜய்யின் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராததால் தவெகவும் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது. அன்புமணி பாமக அதிமுக உடன் இணைந்துள்ளது. தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..
ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.. என் வாக்குச்சாவடி, வெற்றிவாக்குச்சாவடி போன்ற முன்னெடுப்புகளை அக்கட்சி தொடங்கி உள்ளது. மறுபுறம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 20-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. மார்ச் 2-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முதலில் ரூ.1000 கட்டி விண்ணப்பங்களை பெறலாம்..
பொதுத்தொகுதியில் போட்டியிட ரூ.25,000, தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரும் போது முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் கட்டணம் திருப்பி தரப்படும் எனவும் திமுக தெரிவித்துள்ளது.



