வாரணாசி எனும் காசி மாநகரம், முக்தி அளிக்கும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்தால் பிறவிப் பெருங்கடல் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. இதன் காரணமாகவே உள்நாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காசியை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், காசி யாத்திரையை முறைப்படி எங்குத் தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் என்ற நுணுக்கம் பலருக்குத் தெரிவதில்லை. வெறும் கங்கை நீராடலும், விஸ்வநாதர் தரிசனமும் மட்டுமே காசி யாத்திரையின் முழுப்பலனைத் தந்துவிடாது என்பதே ஆன்மிகப் பெரியோர்களின் கருத்தாக உள்ளது.
காசிக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் நேரடியாகக் கங்கையில் நீராடிவிட்டு, விஸ்வநாதரையும் அன்னபூரணி தாயாரையும் தரிசித்து, மாலையில் கங்கா ஆரத்தியுடன் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்கின்றனர். ஆனால், காசி நகரின் உண்மையான ஆன்மிக நுழைவுவாயில் என்பது ‘துந்திராஜ் விநாயகர்’ சன்னதியே ஆகும். காசியின் காவல் தெய்வமாகப் பைரவர் இருந்தாலும், இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களை விஸ்வநாதரிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பை விநாயகரே வகிக்கிறார். புராணங்களின்படி, பக்தர்களின் இன்னல்களைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்த சிவபெருமானே விநாயகரைத் தன்னிடம் அழைத்து காசியிலேயே தங்கும்படி கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே, காசி விஸ்வநாதரைத் தரிசிப்பதற்கு முன் துந்திராஜ் விநாயகரை வணங்குவதே முறையான வழிபாடாகும்.
‘துந்தி’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குத் ‘தேடுபவர்’ என்று பொருள். வாழ்க்கையில் சரியான பாதையைத் தேடித் தவிக்கும் பக்தர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்தி, அவர்கள் முக்தி அடைவதற்கான வழியைக் காட்டுபவர் என்பதால் இவருக்கு ‘துந்திராஜ்’ என்ற பெயர் அமைந்தது. காசி மாநகரம் முழுவதும் மொத்தம் 56 வடிவங்களில் விநாயகர் வீற்றிருந்தாலும், துந்திராஜ் விநாயகரே அவர்களுக்கெல்லாம் முதன்மையானவராகவும், காசிக்கு வரும் பக்தர்களின் முதல் கவசமாகவும் விளங்குகிறார். இவரிடம் அனுமதி பெற்று வழிபாட்டைத் தொடங்கும்போதே ஒருவரது காசி யாத்திரை முழுமை பெறுகிறது. இறைவன் மீதான பக்தி மட்டுமே ஒருவரை முக்திக்கு இட்டுச் செல்லும் நிலையில், அந்த பக்தியின் திறவுகோலாகத் துந்திராஜ் விநாயகர் காசி மண்ணில் அருள்பாலிக்கிறார்.
Read More : உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேற வேண்டுமா..? முதலில் இறைவனிடம் இப்படி கேளுங்க..!! கண்டிப்பா நடக்கும்..!!



