அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்த்தை சேர்ந்த செல்வம் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர் அனுப்பிய பணம், அவரது மனைவி பிரியாவால் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்காகத் தாராளமாக செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. செல்வத்தின் வெளிநாட்டுப் பயணம் ஏற்படுத்திய தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட பிரியா, ராஜாவுடன் நீண்டகாலமாக தவறான உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது.
சமீபத்தில் விடுமுறையில் ஊர் திரும்பிய செல்வத்திற்கு தனது மனைவியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தப் பணம் மாயமானதும், மனைவியின் முறையற்ற தொடர்பும் வெளிச்சத்திற்கு வரவே, இது தொடர்பாக தம்பதியரிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. செல்வத்தின் கடுமையான கண்டிப்பால் மனமுடைந்த நிலையில் இருந்த பிரியா, மறுநாள் அதிகாலை திடீரென மாயமானார்.
அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாகப் பக்கத்து வீடான காதலன் ராஜாவின் வீட்டிலேயே பிரியா சடலமாக தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்தப் மரணத்தின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் ஒளிந்துள்ளதாக கிராம மக்கள் கருதுகின்றனர்.
பிரியா தற்கொலை செய்துகொண்ட சமயத்தில் காதலன் ராஜா வீட்டில் இல்லாதது மற்றும் கணவர் வீட்டில் இருக்கும்போதே துணிச்சலாக காதலன் வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக்கொண்டது போன்ற நிகழ்வுகள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட சதி செயலா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள காதலன் ராஜாவை தேடி வரும் போலீசார், கணவர் செல்வத்திடமும் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Read More : முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு..!! தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு..!!



