தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பனியின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, தற்போது மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுக்க தயாராகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு கோடை காலத்தின் 12 வாரங்களில், சுமார் 4 முதல் 6 வாரங்கள் வரை அதீத வெப்பம் மற்றும் வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைப்பட்ட இரண்டு வாரங்களில் மட்டும் வெப்பச்சலனத்தால் ஏற்படும் இடிமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. எஞ்சிய 3 முதல் 4 வாரங்கள் ஓரளவுக்கு இயல்பான வெப்பநிலை நிலவும். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும், அந்த மாதத்திலும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மழைப்பொழிவைக் குறைத்து வெப்பத்தை அதிகரிக்கும் ‘எல்நினோ’ (El Niño) என்ற வானிலை நிகழ்வே இந்த மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாகும். கடந்த 2020 முதல் 2025 வரையிலான ஆண்டுகள் மழை தரக்கூடிய ‘லாநினோ’ (La Niña) காலங்களாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சூழல் மாறிவருகிறது. இதன் காரணமாக, நடப்பு 2026-ஆம் ஆண்டில் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் இரண்டாவது வாரம் வரை வெயிலின் தாக்கம் நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தமிழகத்தின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
வருங்காலத்தை கணிக்கையில், 2027-ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் ஒரு ‘எல்நினோ’ ஆண்டாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத அளவுக்கு ‘வெப்ப அலை’ (Heat Wave) வீசக்கூடும். சுருக்கமாக சொன்னால், 2026-ஆம் ஆண்டு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ஆம் ஆண்டு உச்சகட்ட வெப்பமான ஆண்டாகவும் அமையப்போகிறது. எனவே, பொதுமக்கள் தங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இப்போதிருந்தே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
Read More : முருகப்பெருமானின் 8ஆம் படை வீடு எங்கிருக்கு தெரியுமா..? இந்த கோயிலுக்கு போனாலே உங்கள் தலைவிதி மாறும்..!!



