உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், படிப்பு தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. நீட் (NEET) தேர்வு எழுத வற்புறுத்திய தந்தையை, மகனே துண்டு துண்டாக வெட்டிக் கொன்று டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மன்வேந்திர சிங் (49), தனது 21 வயது மகன் அக்சத் பிரதாப் சிங்கை ஒரு மருத்துவராகப் பார்க்க விரும்பியுள்ளார். இதற்காக தனது மகனை நீட் தேர்வுக்குத் தயாராகும்படி அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அக்சத் சிங்கிற்கு மருத்துவப் படிப்பில் துளியும் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடும் வாக்குவாதங்கள் நிலவி வந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மன்வேந்திர சிங் திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மன்வேந்திர சிங்கின் வீட்டிற்குச் சென்று போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு ஊதா நிற பிளாஸ்டிக் டிரம்மிற்குள் மனித உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீஸாரே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அந்த உடல் பாகங்கள் மன்வேந்திர சிங்குடையது என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் அக்சத் சிங்கிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில், நீட் தேர்வு எழுத சொல்லி தந்தை கொடுத்த அழுத்தத்தால் ஆத்திரமடைந்து, அவரை கொலை செய்ததாக அக்சத் சிங் ஒப்புக்கொண்டார்.
தந்தை என்றும் பாராமல் இழைக்கப்பட்ட இந்த கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அக்சத் சிங்கை கைது செய்துள்ள போலீஸார், இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : “கண் திருஷ்டியா..? கவலையை விடுங்க”..!! தீய சக்திகளை விரட்டும் 6 அதிசயப் பொருட்கள்..!!



