ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ”தேர்தல் மூலமாகவே அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். கட்சி விதிகளை கொண்டு வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரி போலியான பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதிகளை காலில் போட்டு மிதித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தேர்தலில் இருந்து ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சின்னம்மா, ஊர்ந்து ஊர்ந்து சென்றுதான் முதல்வர் ஆனார். அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன தியாகம் செய்தார்? அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா சொல்லும் சொல்லை மீறாத தொண்டனாக அதிமுக-வில் இருந்துள்ளேன். ஒரு தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பின்னர் 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. வழிகாட்டும் குழுவில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை. தான்தோன்றித்தனமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பார். ஜெயக்குமார் நாவை அடக்கி பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டிற்குள் எங்கும் நடமாட முடியாது. மக்களவை தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது” என்றார்.