தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம், தற்போது ஒரு புதிய கட்சியின் உதயம் என்ற நிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் நிலவிய அதிகாரப் போட்டிகள், சசிகலாவின் சிறைவாசம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் என பல்வேறு சோதனைகளை கடந்த சசிகலா, தற்போது தனது சொந்த அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார்.
அதிமுகவில் மீண்டும் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் புதிய இயக்கம் தொடங்கும் முடிவை அவர் எடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சசிகலா தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய திராவிட நிறங்களுடன் கூடிய அந்த கொடியில், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கட்சியின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத சசிகலா, அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, சசிகலா தனது கட்சிக்கு “அம்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” (அம்மா அதிமுக) என்று பெயர் சூட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் ‘அம்மா’ ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்வதே தனது நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Read More : சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் வரை..!! மார்ச் 1இல் அதிரடி மாற்றம்..!! முக்கிய அப்டேட்ஸ் இதோ..!!



