தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இனி பாடல்கள் மற்றும் ரேடியோ சத்தங்கள் ஒலிக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிடுவதால், பயணிகளுக்குப் பெரும் அசௌகரியம் ஏற்படுவதாக எழுந்து வந்த புகார்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரப் பயணங்களின் போது பேருந்துகளில் அதிரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது பயணிகளின் தூக்கத்தையும், அமைதியையும் பாதிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், இரைச்சலான இசை ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவியது. பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்த போக்குவரத்துத் துறை, பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசுப் பேருந்துகளில் எக்காரணம் கொண்டும் ரேடியோக்களோ அல்லது டேப் ரெக்கார்டர் போன்ற ஒலிபரப்பு கருவிகளோ பயன்படுத்தப்படக் கூடாது” எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவானது பேருந்து பயணச் சூழலை அமைதியானதாக மாற்றுவதுடன், ஓட்டுநர்கள் முழு கவனத்துடன் வாகனத்தை இயக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அரசின் இந்த அதிரடி தடைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இனி அரசுப் பேருந்து பயணம் இரைச்சல் இல்லாத, அமைதியான பயணமாக அமையும் எனப் போக்குவரத்துத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Read More : கோடை காலத்தில் மக்களுக்கு ஷாக் நியூஸ்.. ஏசி விலை உயரப் போகுது.. ஒரே அடியாக எவ்வளவு அதிகரிக்கும்..?



