ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியில் இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த நர்மதா (33) என்ற பெண், ஒரு திருநம்பியால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மினி பேருந்தில் பயணித்தபோது, நர்மதாவிற்கும் 17 வயது திருநம்பி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த அறிமுகம் பேச்சாக தொடர்ந்து, அன்றைய இரவைத் தனிமையில் கழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஒரு வாடகை கார் மூலம் ரங்கம்பாளையம் ரிங் ரோடு பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற புதர்மண்டிய இடத்திற்கு சென்றுள்ளனர். தனிமையில் இருந்தபோது இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, நர்மதா அந்த இளைஞனின் பாலின அடையாளம் குறித்து மிகவும் இழிவாகவும், ஏளனமாகவும் பேசியதாக தெரிகிறது.
“நீ ஒரு ஆண் தானா?” என்பது போன்ற கிண்டலான பேச்சுகள் அந்த இளைஞனை ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றன. இதனால் ஏற்பட்ட மோதலில், அந்த இளைஞன் நர்மதாவை பிடித்துத் தள்ள, அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். மயக்கம் தெளிந்து நர்மதா எழுந்தால், தன்னை தாக்குவார் அல்லது போலீசில் சிக்க வைத்துவிடுவார் என்ற பயம் அந்த 17 வயது இளைஞனை ஆட்கொண்டது.
அந்த விபரீத பயத்தின் விளைவாக, அங்குக் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி நர்மதாவின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் நர்மதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆதாரங்களை மறைக்க சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞன் தப்பியோடியுள்ளார்.
மறுநாள் காலையில் சடலத்தை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், ஈரோடு மாவட்ட எஸ்பி சுஜாதா உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் கால் டாக்ஸி பயண விவரங்களைச் சல்லடை போட்டுத் தேடியதில், அந்தத் திருநம்பி சிக்கினார். தனியார் விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஆத்திரத்தில் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



