தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடைந்த பின்னரும், வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்றைய தினம் (பிப்ரவரி 27) தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மார்ச் 1-ஆம் தேதி வரை மலை மாவட்டங்களில் இந்த நிலை நீடிக்கும் என்றும், மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அதேபோல், இன்று வட தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும், நாளை தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படலாம். வெப்பநிலையைப் பொறுத்தவரை, மார்ச் 2-ஆம் தேதி வரை குறிப்பிடத்தக்கப் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், சில இடங்களில் வெப்பநிலை லேசாக உயர வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை ஒட்டியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம் :
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் நகரின் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸை ஒட்டியும் பதிவாக வாய்ப்புள்ளது. புறநகர்ப் பகுதிகளிலும் இதே போன்ற நிலையே தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
Read More : காலையிலேயே ஷாக்..!! அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கிரமராஜா..!!



