கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் வெயில் மனிதர்களை மட்டுமன்றி, நாம் ஆசையாக வளர்க்கும் செடிகளையும் வாட்டி வதக்கிவிடும். சூரிய வெப்பத்தால் மண்ணிலுள்ள ஈரப்பதம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, மண் வறண்டு வெடிப்புகள் ஏற்படுவது செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். இத்தகைய சூழலில், வீணாக கீழே தூக்கி எறியும் தேங்காய் மட்டைகளை வைத்து, கோடையிலும் செடிகளைத் தளதளவெனச் செழிப்பாக வளர்க்கும் எளிய இயற்கை தொழில்நுட்பம் குறித்து இங்கே காண்போம்.
மண்ணை தயார் செய்யும் முறை :
முதலில் செடிகளைச் சுற்றியுள்ள மண் இறுகிப் போயிருந்தால், அதை கிளறி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணிற்குள் காற்றோட்டம் அதிகரிப்பதோடு, வேர்கள் வெப்பத்தால் காய்ந்து போவதும் தவிர்க்கப்படும். அடுத்த கட்டமாக, தோட்டத்தில் உதிர்ந்து கிடக்கும் காய்ந்த இலைகள் மற்றும் சருகுகளைச் சேகரித்து, கிளறிவிட்ட மண்ணின் மேல் ஒரு அடுக்காகப் பரப்ப வேண்டும். இது மண்ணிற்கு ஒரு கவசமாக செயல்பட்டு நேரடி வெப்பத்தை தடுக்கும்.
தேங்காய் மட்டை :
சருகுகளுக்கு மேலே, தேங்காய் மட்டைகளை செடியைச் சுற்றி அடுக்கி வைக்க வேண்டும். இளநீர் மட்டை அல்லது சாதாரணத் தேங்காய் மட்டைகளை இதற்காகப் பயன்படுத்தலாம். சர்வதேச ஆய்வுகளின்படி (Sustainable Environment & Agriculture Conference), தேங்காய் நாரில் உள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, செடிகள் செழித்து வளரத் தேவையான ஊக்கத்தையும் அளிக்கின்றன. குறிப்பாக, தக்காளி போன்ற செடிகளுக்கு இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூல் கிடைப்பதாக ‘ES Food and Agroforestry’ ஆய்விதழ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அடுக்குகளுக்கு மேல் தண்ணீர் ஊற்றும்போது, தேங்காய் மட்டை மற்றும் சருகுகள் தண்ணீரை தங்களுக்குள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால் கோடை வெயிலிலும் மண் சீக்கிரம் காய்ந்து போகாது. வழக்கமாக தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய இடத்தில், இந்த முறையை பின்பற்றினால் சில நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. நாளடைவில் அடியில் உள்ள சருகுகள் மட்கி இயற்கை உரமாக மாறி செடிக்கு ஊட்டம் தரும். வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காய் நார்களை கூட தூக்கி எறியாமல் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.



