டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பெரும் திருப்பமாக, முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலங்கானா எம்.எல்.சி கே.கவிதா உள்ளிட்ட 23 பேரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றம் என்ன கூறியது?
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் இந்த தீர்ப்பை வழங்கினார். குற்றவாளி எண் 18 ஆக குறிப்பிடப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் மற்ற அனைவரையும் அவர் விடுதலை செய்தார். மதுபான கொள்கை உருவாக்கத்தில் குற்றமான சதி அல்லது தவறான நோக்கம் இருந்ததாக நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி கூறினார். “இந்த மதுக்கொள்கையில் ஒருங்கிணைந்த குற்றச் சதி அல்லது குற்ற நோக்கம் எதுவும் இல்லை” என்று நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டது.
CBI-க்கு கடும் கண்டனம்
போதுமான ஆதாரங்கள் இல்லாமலே அரசியல் தலைவர்களை வழக்கில் சேர்த்ததாக சிபிஐக்கு நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. தாக்கல் செய்யப்பட்ட விரிவான குற்றப்பத்திரிகையில் பல குறைபாடுகள் உள்ளன என்றும், சாட்சிகளின் வாக்குமூலங்களால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார். சிசோடியாவுக்கு எதிராக முதல்நிலை வழக்கை உருவாக்க சிபிஐ தவறியதாகவும், கெஜ்ரிவால் மீது தெளிவான ஆதாரம் இல்லாமலே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து, 23 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் அனைவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது. இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி தலைமைக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. சிபிஐ ஒரு சதி கதையை உருவாக்க முயன்றதாகவும், அரசு தரப்பின் வாதம் வெறும் ஊகமே என்றும் நீதிபதி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
தீர்ப்புக்குப் பிறகு கண்கலங்கிய கேஜ்ரிவால்
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் கண் கலங்கினார்.. மேலும் “நான் ஊழல்வாதி அல்ல. மணிஷ் சிசோடியாவும் நானும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றமே கூறியுள்ளது,” என்றார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த இந்த தீர்ப்பு, அவருக்கும் கட்சித் தலைமைக்கும் நியாயம் கிடைத்த உணர்வை ஏற்படுத்தியது.
இதனிடையே, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அகர்வால், சமூக வலைதளமான X-இல் “ உண்மை எப்போதும் வெற்றி பெறும்” என்று பதிவிட்டார்.



